பக்கங்கள்

திங்கள், 27 செப்டம்பர், 2010

கலோரியைக் குறைக்க...

அதென்ன கலோரி... ஏதோ புதுசா எல்லாம் சொல்றாரே டாக்டர் என்று பலரும் எண்ணலாம். உடல் எடை கூடிவிட்டால், சில கிலோ எடையை குறைக்க வேண்டுமானால், முதலில் அதற்கு கலோரியை குறைக்க வேண்டும். அதுக்காகத்தான், நம்மில் சிலர், உடற்பயிற்சி, ட்ரெட்மில், வாக்கிங் என்று என்னவெல்லாமோ செய்கின்றனர். அப்படி கலோரிக்களை "எரிக்க எரிக்க"த்தான் உடலில் எடை குறையும். நீங்களும் "ஸ்லிம்"மாக இருக்க முடியும்.

சரி, கலோரி (Calorie) என்றால் என்ன தெரியுமா? கலோரி என்பது உடலுக்கு தேவைப்படும் எரிசக்தி. அதாவது, உடலில் சீரான இயக்கத்துக்கு இந்த கலோரியும் முக்கிய பங்கை செலுத்துகிறது. வியர்வை சிந்தி வேலை செய்வோருக்கு அதிகமாகவும், "சீட்"டில் உட்கார்ந்து வேலை செய்வோருக்கு குறைவாகவும் தேவைப்படும். கர்ப்பிணிப் பெண்கள் உட்பட சில பெண்களுக்கு என்று இவ்வளவு கலோரி என்று கணக்கு உண்டு.

"டீன் ஏஜ்" வரை கலோரி கணிசமாக தேவை தான். ஆனால், நாற்பது வயதை தாண்டிவிட்டால், உடல் எடை கூடிவிட்டால், "அடடா, கொழுப்பு கூடிவிட்டதே" என்று கலோரியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

கலோரி என்றால், எங்கிருந்தும் கிடைக்கவில்லை. நாம் உண்ணும் உணவில் இருந்து தான் கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவுகளில் கார்போஹைட்ரேட் மூலம் 50 முதல் 60 சதவீதம் வரை கலோரி கிடைக்கிறது. புரோட்டீன் மூலம் 20 சதவீதம், கொழுப்பு மூலம் 15 முதல் 20 சதவீதம் கிடைக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு நாளுக்கு 300 கலோரி தினமும் அதிகமாக வேண்டும். மற்றவர்களுக்கு வயதுக்கு, உடல் உழைப்புக்கு ஏற்ப கலோரி தேவைப்படுகிறது. உதாரணமாக 16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு தினமும் கலோரி தேவை, அவர்கள் முழு உடல் எடைக்கு 2200 கலோரி தேவை. ஆனால், உடல் எடை கூடிவிட்டது என்று தெரியும் போது, கலோரியை குறைக்க என்ன செய்யலாம் என்று டாக்டர்களிடம் தான் கேட்க வேண்டும்.

ஒருவருக்கு எவ்வளவு கலோரி தினமும் தேவைப்படுகிறது என்பதை "ஹாங்ஸ் பெனடிக்ட் பார்முலா"படி டாக்டர்கள் முடிவு செய்கின்றனர். உடலுக்கு கலோரியும் தேவை, உடல் எடையும் கூடிவிடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த கலோரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

* உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் (Carbohydrates) , புரோட்டீன், கொழுப்புகள் ஆகியவற்றில் இருந்து கலோரி கிடைக்கிறது.

* உடலின் எரிசக்தியான கலோரி (Calorie), பல வகை இயக்கங்களுக்கும் தேவை என்றாலும், அது அதிகமாகிவிட்டால், கொழுப்பாக மாறிவிடும்.

* புரோட்டீன் (protein), கார்போஹைட்ரேட்டின் ஒரு கிராமில் நான்கு கலோரி (Calorie) உள்ளது. கொழுப்பில் தான் அதிக கலோரி, அதாவது, ஒன்பது கலோரி உள்ளது.

* நீங்கள் சாப்பிடும் முறை, அதனால், உடல் கூடுவது, உடல் உழைப்பு போன்றவற்றால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலில் கலோரியை சேர்க்கக் கூடாது. சேர்ப்பதால் தான் கொழுப்பு கூடி, உடல் எடை கூடுகிறது.

* ஒருவருக்கு எடை கூடிவிட்டது என்றால், அதை போக்க கலோரியை "எரிக்க" வேண்டும். உடற் பயிற்சி, ட்ரெட் மில், வாக்கிங் என்று வியர்வை சிந்தி தான் உடலில் "கொழுப்பாக தேங்கிய" கலோரியை எரிக்க முடியும்.

* ஒருவர் ஒரு பவுண்ட் எடையை குறைத்துள்ளார் என்றால், 3500 கலோரியை எரித்து இருக்கிறார் என்று அர்த்தம். உடற்பயிற்சியால், ஒரு வாரத்தில் இதை செய்ய முடியும்.

அதனால், உங்கள் உடல் இயக்கத்துக்கு தேவையான கலோரிகளை சீராக பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்க சீரான உணவுப் பழக்கங்கள் தேவை. அதிக கலோரி உள்ள உணவுகளாக சாப்பிட்டால், அதிக கலோரி சேர்ந்து, அதிக கொழுப்பு சேரும்.

அப்படி கொழுப்பு சேர்ந்தால், அப்புறம் கேட்கவே வேண்டாமே, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி என்று தொடருமே.

எந்த ஜூசில் அதிக கலோரி?

காபி, டீ, ஜூஸ் சாப்பிடுவதில் தவறே இல்லை. ஆனால், அடிக்கடி அதிக கலோரி உள்ள ஜூஸ் சாப்பிடுவதும் கூடாது. அதுவும், எடை கூடிவிட்டது என்று தெரிந்தும், அதிக கலோரி உள்ள பானங்களை விழுங்கினால், அப்புறம் கொழுப்பு குவிந்துவிடும்.

ஆப்பிள் ஜூஸ் - 55

திராட்சை ஜூஸ் - 55

மாம்பழ ஜூஸ் - 58

ஆரஞ்சு ஜூஸ் - 44

பைனாப்பிள் ஜூஸ் - 52

கரும்பு ஜூஸ் - 36

தக்காளி ஜூஸ் - 17

தேங்காய் பால் - 76

இளநீர் - 24

காபி (ஒரு கப்) - 98

டீ (ஒரு கப்) - 79

கோக்கோ (ஒரு கப்) - 213

பசும்பால் - 65

ஸ்கிம் மில்க் - 35

தயிர் - 51

"ப்ரைடு" உணவுகளா? "டீன்" பெண்ணே உஷார் நீங்கள் ஆணா, பெண்ணா, டீன் ஏஜா, அடிக்கடி "ப்ரைடு" அயிட்டங்கள் வெளுத்துக்கட்டுவீர்களா? ஆண்களாக இருந்தால், அவர்களுக்கு ஐம்பதை தாண்டியவுடன் சர்க்கரை, ரத்த அழுத்தம் என்று தான் வரும். ஆனால் பெண்களுக்கு, அவர்கள் திருமணத்துக்கு பின்னர் "வேலையை" காட்டிவிடுமாம்.

இதை அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக பொதுசுகாதார ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் சொல்லும் சில எச்சரிக்கை தகவல்கள்:

* சில "ப்ரைடு" உணவு வகைகளில் அதிக கொழுப்பு உள்ளது. இது ஆரோக்கியமற்ற கொழுப்பு. ஆண்களை விட பெண்களை தான் அதிகம் பாதிக்கும்.

* இதை "டிரான்ஸ் ஃபேட்" என்பர். ப்ரைடு ரைஸ் (Fried rice) , ப்ரைடு சிக்கன் (Fried chicken), குக்கீஸ், பாஸ்ட்சுஸ் போன்றவற்றில் இருக்கும். இது ரத்த நாளங்களில் பதிந்து சுருக்கிவிடும்.

* கருப்பை தொடர்பான மலட்டுத் தன்மையை இந்த "ப்ரைடு" உணவுகளால் ஏற்படும் "டிரான்ஸ் பேட்" எனப்படும் கொழுப்பு அதிகரிக்கும்.

* வெறும் இரண்டு சதவீதம் அளவுக்கு இந்த கொழுப்பு சேர்ந்தால் போதும், அதனால் இரண்டு மடங்கு மலட்டுத் தன்மை பாதிப்பு வரும்.

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும்

வருடம் கி.பி 2046

சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் ஒரு பூங்காவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

திடீரென சச்சினுக்கு ஒரு சந்தேகம், சுவர்க்கத்தில் கிரிக்கெட் விளையாடுவார்களா ? இருவரும் விவாதித்து விவாதித்து ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. எனவே இருவரும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தார்கள்.

இருவரில் யார் முதலில் இறக்கிறார்களோ அவர்கள் உயிரோடிருப்பவருக்கு தகவல் சொல்ல வேண்டும். சொர்க்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு உண்டா இல்லையா என்று.

நாட்கள் நகர்ந்தன.

பாவம் சச்சின். மெக்ராத் பந்தில் கிளீன் போல்ட் ஆவது போல கனவு கண்டு மாரடைப்பில் ஒரு நாள் மரித்துப் போனார்.

கங்குலி அதே பூங்காவில் காத்திருந்தார். சச்சினின் தகவலுக்காக.
திடீரென்று ஒரு குரல்..

கங்குலி…கங்குலி….

அழைத்தது சச்சினே தான். பரவசமடைந்த கங்குலி வேக வேகமாகக் கேட்டான். சச்சின், சுவர்க்கத்தில் கிரிக்கெட் விளையாடுகிறார்களா ?
சச்சின் சொன்னார், உனக்குச் சொல்ல இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று நல்ல விஷயம் , இன்னொன்று கொஞ்சம் மோசமான விஷயம் தான்.

சரி சொல்லு, கங்குலி கேட்டான்

சுவர்க்கத்தில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இது நல்ல செய்தி.

சரி மோசமான செய்தி என்ன ?

வரும் வெள்ளிக்கிழமை நீ தான் துவக்க ஆட்டக்காரர் !

பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு...

"உங்கள் அன்புக் குழந்தைகளின் பரீட்சை ஜூரத்தை விரட்டியடிக்க பத்திய உணவு தேவையில்லை தாய்மார்களே! பக்குவமான, முழுமையான சத்துணவு போதும். பரீட்சையை ஊதித் தள்ளிவிடுவார்கள்" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சந்திரன்.
ஆரோக்கிய டிப்ஸ்:
மூளைதான் நமது உடலின் இயக்கங்கள், நினைவுகள், உணர்வுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. பரீட்சை சமயத்தில், மூளை நல்ல நிலையில் இருக்கவேண்டும். குறைவான ஊட்டச்சத்து, பரீட்சை பயம் தந்த இறுக்கம், அடிக்கடி சாப்பிடும் டீ, காபி, பாக்கு.... இவையெல்லாம் குழந்தைகளின் மூளையின் செயல்பாடுகளைக் குலைக்கக்கூடியவை. மூளைக்குச் செல்ல வேண்டிய முக்கியமான ஊட்டச்சத்துகள் குறையும்போது, அதன் விழிப்புத்தன்மை குறைந்து, மந்தமாகிறது.
தகவல்களைப் பதிவுசெய்ய, படிப்பவற்றை நினைவில் நிறுத்த, நினைவில் இருப்பதை மீண்டும் கொண்டு வந்து எழுத... இப்படி எல்லாப் பணிகளுக்கும் மூளைக்குத் தேவையானது குளுகோஸ், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள், எனவே, மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஊட்டச்சத்து மிக்க உணவு, இளம்வயதினருக்கு - அதுவும் தேர்வுக்காலங்களில் அவசியம் தேவை. அவை என்ன எனப் பார்க்கலாமா?

கவனத்தை ஒருமுகப்படுத்த:

முழுப்பயறு வகைகள், கைகுத்தல் அரிசி, கோதுமை, ராகி, சோளம், பருப்பு, உருளைக்கிழங்கு போன்றவை. பாப்கார்ன், வெஜிடபிள் சாண்ட்விச், ஃப்ரெஷ்ஷான பழங்கள் போன்ற நொறுக்குத் தீனிகளும் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவும்.

உஷார்த்தன்மை வர, மனவலிமை பெற, பசியைக் கட்டுப்படுத்த:

இவற்றுக்கு முக்கியத் தேவை புரதம். குழந்தைகள் மிகவும் சோர்வாக, எதிலும் அக்கறை காட்டாதவர்களாக, சோம்பேறிகளாக, மன உளைச்சலோடு காணப்பட்டாலோ அல்லது மிகவும் கவலைப்பட்டு அழும் நிலையில் இருந்தாலோ, மூளைக்குப் புரதம் தேவை என்பது அறிகுறி.

மீன், முளைக்கட்டிய பயறு வகைகள், உலர் பருப்பு வகைகள், தானியங்கள், கொழுப்புக் குறைக்கப்பட்ட பால், தயிர், சீஸ், பருப்பு வகைகள் ஆகியவை புரதச்சத்து நிறைந்தவை. குழந்தைகளுக்கு இவற்றைத் தரலாம்.

மகிழ்ச்சியான மனநிலைக்கு:

பழங்கள், காய்கறிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், பொட்டாஷியம், வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்துள்ளன. மூளையிலுள்ள செல்கள் பாதிக்கப்படாதவாறு இந்த ஊட்டச்சத்துகள்தான் பாதுகாக்கின்றன. பரீட்சை சமயத்தில், பழங்களும் காய்கறிகளும் உங்கள் குழந்தைகளின் உணவில் அதிகம் இடம்பெறுமாறு செய்யுங்கள். வைட்டமின்களையும் தாதுக்களையும் அவை வாரிவழங்கும்.

ஆரோக்கியமான நரம்பு மண்டலத்துக்கு:

முட்டை, ஆல்மண்ட், வால்நட், போன்ற பருப்புகள், மீன், எள், பரங்கிவிதை (இது ஒரு சத்து மிகுந்த நொறுக்குத்தீனி), முழு கோதுமை போன்ற உணவுகள்.

சிந்திக்கும் சக்தி அதிகரிக்க:

தானியங்கள், பருப்புகள், முளைக்கட்டிய பயறு வகைகள், பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்துப் பொருள்கள், ஈஸ்ட், கீரைகள்.

தேர்வு சமயத்தில், உங்கள் குழந்தைகளுக்கு முக்கியமான தேவை தண்ணீர்தான். இந்தச் சமயத்தில், உடலில் இருக்கும் தண்ணீர் சத்து அதிகமாக வெளியேறுவதால், அவர்கள் மந்தமாகவும் சோர்வாகவும் இருப்பார்கள். ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டும். அவர்கள் உடற்பயிற்சி செய்பவராகவோ, மிகவும் வெப்பமான இடத்தில் வசிப்பவராகவோ இருந்தால், இன்னும் அதிகமான தண்ணீர் அருந்தவேண்டும்.

காபி, டீ, மென்பானங்களை அடிக்கடி அருந்த அனுமதிக்காதீர்கள். குடித்த மறுநிமிடம் மூளைக்கு புத்துணர்வைத் தருவதுபோல் தோன்றினாலும், அதே வேகத்தில் இவை உடலை தளர்வடையச் செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள்.

பரீட்சை சமயங்களில் அதிகமான சர்க்கரையைத் தவிர்ப்பதும் நல்லது. முதலில் சுறுசுறுப்பைத் தருவது போலிருந்தாலும், சிறிது நேரத்தில் களைப்பை உண்டாக்கி, தூக்கம் வரவழைக்கும். சர்க்கரைக்குப் பதிலாக முடிந்தவரை, வெல்லம், நாட்டுச்சர்க்கரை, பனைவெல்லம், தேன் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்.

போனஸ் டிப்ஸ்:

குழந்தைகளுக்கு "வைட்டமின் சி"-யை அதிகம் சேருங்கள். எலுமிச்சம்பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய பழச்சாறுகளில் "வைட்டமின் சி" கொட்டிக்கிடக்கிறது. மேலும் கொத்தமல்லிச் சட்னி, தக்காளி பழச்சாறு, முழுப்பயறு வகைகளையும் சாப்பிட்டால், மூளைக்கான செல்களுக்கு வேறு பாடிகார்டே தேவையில்லை.

சாப்பாட்டுக்கு ஊறுகாய் தொட்டுக் கொள்வதை தவிர்த்துவிடுங்கள். அதற்குப் பதிலாக பருப்புத் துவையல் அரைத்துக் கொடுங்கள். அதில் வைட்டமின் பி6 உள்ளதே!

காபி, டீ, மென்பானங்களுக்கு பதிலாக பழச்சாறு, இளநீர், கேரட், பீட்ரூட், புதினா, கொத்தமல்லி, தக்காளி போன்ற காய்கறிகளின் சாறுகள், பானகம் ஆகியவற்றை தரலாம்.

வாழைப்பழம் மிக நல்ல ஸ்நாக்ஸ். அதில் "வைட்டமின் பி6" நிறைந்திருப்பதால், பிள்ளைகளின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதுடன் சிந்தனைத்திறனையும் அதிகரிக்கிறது.

உலர்பருப்புகள், தானியங்கள் ஆகியவற்றில் உள்ள ஃபேட்டி ஆசிட்ஸ், புரதம் ஆகியவை மூளைச் செல்களைப் பாதுகாக்கும் கேடயங்கள். அவை அதிகம் உள்ள பாதாம், வால்நட், பருப்புகளையோ, அல்லது எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றையோ தாராளமாகக் கொடுக்கலாம்.

தினமும் ஒழுங்கான உடற்பயிற்சி சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். அதனால், உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்கள். இது அவர்களின் மன அழுத்தத்தையும் விரட்டிவிடும்.

பிள்ளைகளின் மூளையை ரீசார்ஜ் செய்ய, நல்ல தூக்கமும் அவசியம். குறைந்தபட்சம் 6-லிருந்து 8 மணி நேரம் அவர்கள் தூங்கவேண்டும்.

எக்காரணம் கொண்டும், எந்த வேளை உணவையும் "வேண்டாம்" என ஒதுக்கவிடாதீர்கள். சாப்பிடாமல் இருக்கும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதால் எரிச்சல், கோபம், அழுகை, கவலை, பயம் போன்ற உணர்வுகள் உண்டாகும். குழந்தைகளின் மூளைக்கு, சர்க்கரை (குளுகோஸ்) தொடர்ந்து, சீராகக் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும். என்பதை மறந்துவிடாதீர்கள்.

மூன்று வேளை பலமான உணவு சாப்பிட வைப்பதைவிட, சீரான இடைவெளியில் அவ்வப்போது சிறு சிறு அளவு உணவு உண்பது, வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பலமான உணவால், வயிறு கனப்பதுடன், தூக்கம், மந்தநிலை போன்றவை ஏற்படும்.

பரீட்சை நேரம் என்றில்லை. எப்போதுமே அவர்களை பதப்படுத்தப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, டின், அட்டைப் பெட்டி உணவுகள் மற்றும் திடீர் உணவுகள், நொறுக்குத்தீனி போன்றவற்றை உண்ண அனுமதிக்காதீர்கள். ரசாயனக் கலப்புமிக்க அவைதான், ஆரோக்கியத்தின் முதல் எதிரிகள்.

கொழுப்பைக் கரைக்கும் பசலை!

கார்ட்டூன் நாயகன் பாப்பாய்க்கு மிகவும் பிடித்தது பசலைக்கீரை. "என் புஜபல ரகசியம் இந்த கீரை தான்" என்று குழந்தைகளிடம் பிரபலப்படுத்தினான்.

உண்மையில் பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் காய்கறி வேறெதுவும் இல்லை. இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுப்பதால் மேலைநாடுகளில் இதை கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலுக்கு எதிரி.

பசலை ஆசியாவில் முதலில் பழக்கத்திற்கு வந்ததாக சொல்கிறார்கள். பத்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமானது. பிரபலமானது 1800-களில். பிரான்ஸ், இங்கிலாந்து வந்து பின் அமெரிக்காவுக்குப் போனது. மக்கள் அதிக நேரம் வேகவைத்ததால் சாம்பல் கலருக்கு மாறி வாசனையும் போய் சத்தெல்லாம் வீணானது. அப்புறம்தான் கீரையை எவ்வளவு ஃப்ரஷ்ஷாக சமைக்கிறோமோ, அந்த அளவுக்கு நல்லது; சத்து வீணாகாது என்று புரிந்தது.

இந்தக் கீரை ஆண்டு முழுவதும் கிடைக்கும். குளிர்காலத்தில் இளசாக கிடைக்கும். மணமும் அலாதி. ஹிந்தியில் இதை பாலக் என்பார்கள்.

பசுமையாக ஈரப்பசையுடன், கரும்பச்சை நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் இலைகள் இருந்தால் கீரை பழசு. தண்டு மெலிதாக இருந்தால் இளசு. முகர்ந்து பார்த்தால் அதன் பச்சை வாசனையிலேயே தெரியும் புதியது என்று.

சாதாரணமாக கீரையை நறுக்கி விட்டு அலம்புவார்கள். அப்படிச் செய்தால் சத்துக்கள் வெளியேறிவிடும். பதிலாக ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் வைத்து அப்படியே முழுசாகபோட்டு அலசி எடுக்கவும். தண்ணீரில் மண் குப்பையெல்லாம் தங்கிவிடும். பின்பு நறுக்கி சமைக்கவும். முற்றிய தண்டுகளையும், இலைகள் நடுவில் தடித்துள்ள பாகங்களையும் கிள்ளி போட்டுவிட வேண்டும்.

இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.

அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்குமீறி சாப்பிடக் கூடாது.

கட்டாக இருந்தால் பிரித்து கொஞ்சம் வாடிய மஞ்சள் இலை, தண்டை எடுத்துவிட்டு காற்றோட்டமாக சிறிதுநேரம் வைத்தால் உள் ஈரம் போய்விடும். அலசும் போது இருக்கும் ஈரமே போதும். அதிக தண்ணீர் வைத்து வேகவைப்பது தவறு. தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடாமல் வேக விடலாம். நிறம் மாறாமல் இருக்க சிறிது சர்க்கரை சேர்க்கலாம். கீரையில் இருக்கும் உப்பே போதுமானது. கூடுதலாக தேவையில்லை என்கிறார்கள். தேவைப்பட்டால் கடைசியில் கொஞ்சம் போடலாம். வெந்தால் கீரை சுருங்கி விடுமென்பதால் முதலில் சேர்த்தால் உப்பு கரிக்கும். குறைந்த நேரமே வேகவைக்கவும்.

உணவுச்சத்து:

இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.

ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து:

கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.

இதை பச்சையாக சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். வெங்காயம், தக்காளி சேர்த்து கடைதல், தேங்காய், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துக் கூட்டு செய்தல், புளி, பருப்பு போட்டு குழம்பு, மோர், தேங்காய் அரைத்து மோர்க்குழம்பு இப்படி நிறைய முறையில் சமைக்கலாம்.

இறா‌ல் குழ‌ம்பு

தேவையானவை

இறா‌ல் - 1 க‌ப்
பு‌ளி - பெ‌ரிய நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு
த‌க்கா‌ளி - 2
வெ‌ங்காய‌ம் - 2
பூ‌ண்டு - 1
‌மிளகா‌ய் தூ‌ள் - 3 தே‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - கா‌ல் தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - ‌சி‌றிது
க‌‌றிவே‌ப்‌பிலை ‌சி‌றிது
தா‌ளி‌க்க - எ‌ண்ணெ‌ய், கடுகு, வெ‌ந்தய‌ம்

செ‌ய்யு‌ம் முறை

இறாலை‌த் தோ‌ல் உ‌ரி‌த்து கழு‌வி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

பு‌ளியை தேவையான அள‌வி‌ற்கு‌ ‌நீ‌ர் ‌வி‌ட்டு‌க் கரை‌த்து, அ‌தி‌ல் உ‌ப்பு, ‌மிளகா‌ய் தூ‌‌ள், ம‌ஞ்ச‌ள் தூ‌ள் சே‌ர்‌த்து ஒரு த‌க்கா‌ளியையு‌ம் போ‌ட்டு கரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌‌‌த்தை பொடியாக நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம். பூ‌ண்டை தோ‌ல் உ‌ரி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு கடுகு, வெ‌ந்தய‌ம், க‌றிவே‌ப்‌பிலை‌ப் போ‌ட்டு தா‌ளி‌த்து வெ‌ங்காய‌த்தை‌ப் போ‌ட்டு வத‌‌க்கவு‌ம்.

‌பிறகு இறாலை‌ப் போ‌ட்டு வத‌க்‌கியது‌ம், த‌க்கா‌ளியையு‌ம், பூ‌ண்டையு‌ம் போ‌ட்டு வத‌க்கவு‌ம்.

கடை‌சியாக கரை‌த்து வை‌த்து‌ள்ள பு‌ளி‌க் கலவையை ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க ‌வி‌ட்டு இற‌க்‌க்வு‌ம்.

மூளை சுறுசுறுப்பாக செயல்பட...

இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. எவ்வளவு தெளிவாக சிந்திக்க மூளை துணைபுரிகிறதோ, அவ்வளவு வியப்பூட்டும் வகையில் விஞ்ஞானிகளையே குழப்பத்துக்கு உள்ளாக்கிவிடுகிறது மூளை. அதன் செயல்பாடுகள் மிக நுண்ணியதாகவும் தெளிவாகவும் இருக்கின்றன.

மிகச் சாதாரண மனிதர்கள் மூளையை 2 சதவீதமே பயன்படுத்துகிறார்களாம். நாம், புத்திசாலி என்று பாராட்டுபவர்கள்கூட 5 சதவீத மூளையையே பயன்படுத்துகிறார்கள். ஆய்வாளர்கள் 7 சதவீத மூளையையும், விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளையையும் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது. அப்படியானால் முழு அளவு மூளையின் செயல்பாடுகளை வியக்காமல் இருக்க முடியுமா?

மற்ற விலங்கினங்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்தி, அர்த்தமுள்ள இனமாக நிலைநிறுத்தி வருவதே இந்த மூளைதான். ஒரு நொடிக்குள் பல தூண்டல்களை எதிர்கொண்டு செயல்களை செய்ய துரிதமாக இயங்குவது மூளை. மனிதர்களில் கூட நாம் பிறரில் இருந்து வேறுபட்டு இருந்தால் அது நமது மூளையை பயன்படுத்தும் ஆற்றலில்தான்.

எனவே நாம் துரிதமாகச் செயல்பட்டு வெற்றி பெற வேண்டுமானால் மூளையை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதற்கு மூளை எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். அதன் சுறுசுறுப்பை அதிகரிக்க இங்கே சில டிப்ஸ்...

* மூளை சுறுசுறுப்பாக செயல்பட முதலில் அதிகாலையில் எழ வேண்டும். பின்பு நல்ல காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து சுமார் 15 நிமிடம் காற்றை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். மூச்சுப்பயிற்சி பெற்றவர்களிடம் பயிற்சி பெற்று செய்வது சிறந்த பலன் தரும்.

மேலும் "ட்ரெட்மில்"லில் ஓடுவது, ஜாக்கிங் செய்வது, ஓட்டம் போன்ற பயிற்சிகளை செய்தாலும் மூளையின் செயல்பாடுகள் விரைவுபடுத்தப்படும்.

* இரண்டாவதாக, சத்துள்ள சரிவிகித உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக முளைகட்டிய தானியங்கள், பச்சைக்காய்கறிகள், பழவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* அதே வேளையில் உணவுக் கட்டுப்பாடும் அவசியம். கண்ட கண்ட வேளைகளில் சாப்பிடுவதும், அளவை மீறிச் சாப்பிடுவதும் மூளையின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒழுங்கற்ற உணவுமுறை மந்தத் தன்மையையும், சில வியாதிகளையும் ஏற்படுத்தும்.

* உடல் பராமரிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். நோய்கள் தாக்காத வகையில் தேவையான விழிப்புணர்வுடன் சுத்தமாக இருக்க வேண்டும். டைப் 2 நீரிழிவு, அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் மூளையின் செயல்களை பாதிக்கக் கூடியவை. இவை அறிவுத்திறனை பாதித்து, கவலைகளை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்க்க சிகரெட் மற்றும் புகைப் பழக்கங்களை கைவிட வேண்டும். மேலும் கொழுப்பு குறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.

* அடுத்ததாக மூளை புத்துணர்ச்சியுடன் செயல்படத் தேவையானது ஓய்வு. மூளைக்கு ஓய்வு என்பது தூக்கத்தில்தான் கிடைக்கிறது. எனவே வேலை, வயதுக்கு தக்கபடி போதிய அளவு தூங்கி ஓய்வெடுங்கள். சரியான ஓய்வு இல்லாவிட்டால் மந்தத்தன்மை, சோர்வு ஏற்படுவதோடு சில வியாதிகள் தொற்றவும் வாய்ப்பிருக்கிறது.

* ஒரு நாளைக்கு 2 முறை காபி அல்லது டீ குடியுங்கள். இதில் உள்ள "காபீன்" என்னும் ரசாயனப்பொருள் புத்துணர்ச்சியை தூண்டும் திறன் உடையது. குறிப்பாக மாலைநேர காபி மூளையின் செயல்பாட்டை அதிக அளவில் தூண்டுவதாக ஆய்வில் கண்டறிந்து உள்ளனர். தினசரி 4 முறைக்கு மேல் டீ பருகுவதையும் தவிர்க்க வேண்டும்.

* அதேபோல் மூளைக்கு புத்துணர்ச்சி ஊட்டும் உணவு மீன். அதில் உள்ள "ஃபேட்டி ஆசிட்", ஒமேகா 3 ஆகியவை மூளை செயல்படும் விதத்தை துரிதப்படுத்துகிறது. எனவே உணவில் மீனையும் கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

* மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமானால் கவலைகள் இருக்கக் கூடாது. மன அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவலையைத் திசை திருப்பி மீண்டும் புத்துணர்ச்சியாக செயல்பட முடியும். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபடலாம்.

* அறிவுத்திறனை வளர்க்கும் போட்டிகளில் பங்கேற்றுப் பழகுங்கள்.

* நினைவுத்திறனை அதிகப்படுத்துவதற்காக மருந்து மாத்திரைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

மேற்கண்ட வழிகளை பின்பற்றினால் மூளையில் சுறுசுறுப்பு தொற்றிக் கொள்ளும். வெற்றி கைகளை நீட்டி தழுவிக் கொள்ளும்.

வியாழன், 2 செப்டம்பர், 2010

ஒழுங்கா பராமரிக்கிறீங்களா தலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது

புதுடெல்லி: பளீச் என்று எரியும் பல்பாக இருந்தாலும், பைக்காக இருந்தாலும், வலுவாக இத்தனை மணி நேரம், இத்தனை நாள்தான் இயங்க முடியும். அதுபோலத்தான் நம் உடலும். உடலில் உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித்தனி வயது உண்டு.
பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்:

*மூளை: மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி; நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 உயிரணுக்கள் வீதம் சரியும். நினைவாற்றல் உட்பட பல செயல்கள் செயலிழக்க இது தான் காரணம்.
*குடல்: குடலுக்கு 55 வயது வரை தான் முழு ஆரோக்கியம். அப்போது குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கான நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதனால், அஜீரணம், வயிற்றுப்பிரச்னை போன்றவை தலைகாட்டும்.
*மார்பகம்: பெண்களுக்கு மார்பகம் 35 வயதில் சுருங்க ஆரம்பிக்கும். அதன் தசைகள், கொழுப்புத்தன்மை குறைய ஆரம்பிக்கும்; அதனால், பருத்த மார்பகம் சுருங்க ஆரம்பிக்கும்.
*சிறுநீர்ப்பை: இது வயசாவது 65 ல் ஆரம்பிக்கிறது. 30 வயதில் 2 கப் சிறுநீர் தேக் வைக்கும் அளவுக்கு கொள்ளளவு இருக்கும்; 65 ல் ஒரு கப் தான் தேங்கும் அளவுக்கு சுருங்கி விடும்.
*நுரையீரல்: 20 வயது வரை தான் முழுவீச்சில் இயங்கும். அதன் பின், இடுப்பு எலும்பு பகுதி நெருக்கிக்கொள்ள, நுரையீரல் சக்தி குறைந்து, மூச்சு , உள்ளிழுத்து வெளியேவிடும் அளவு குறையும். 40 வயசுக்கு மேல், சில அடிதூரம் நடந்தால் மூச்சு வாங்குவதற்கு காரணம் இது தான்.
*குரல்: தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக்கள் நீடிக்கும் வரை தான் குரலில் இனிமை இருக்கும். 65 வயதுக்கு பலவீனமாகி, குரல் ‘கரகர’ தான்.
*கண்: பத்திரிக்கை படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் கண்களை இடுக்கி, பாடாய்ப்படுத்தி பார்ப்பர் சிலர்; அடடா, வயது 40 ஆகி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அந்த வயதில் தான் பார்வை வலிமை குறைய ஆரம்பிக்கிறது.
*இருதயம்: ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி படைத்தது இருதய பம்ப்; ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40 வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. அதனால், மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் பாயும் வேகமும் குறைகிறது.
*கல்லீரல்: இந்த ஒரு உறுப்பு மட்டும் தான் 70 வயது வரை சூப்பர் இயக்கத்துடன் உள்ளது. குவாட்டரை நினைக்காதவரை இதன் பலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும்.
*சிறுநீரகம்: ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலையை இதன் ‘நெப்ரான்ஸ்’ என்ற திசுக்கள் செய்கின்றன. 50 வயதில் இது வலுவிழக்க ஆரம்பிக்கிறது.
*எலும்புகள்: 25 வயது வரை தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பின் 35 ல் இருந்து பலவீனமடைய ஆரம்பிக்கும்.
*பற்கள்: எச்சில் ஊறும் வரை தான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கும். நாற்பது வயதில் எச்சில் ஊறுவது குறைய துவங்கும். அதனால் தான் சிலரிடம் கப்ஸ்.
*தசைகள்: முப்பது வயதில் தசைகள் 0.5 முதில் 2 சதவீதம் வரை ஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். தினசரி பயிற்சி, உடல் உழைப்பு தான் இதில் இருந்து காக்கும்.
*தோல்: தோல்பகுதி, 25 வயதில் இருந்தே பலவீனமடைய ஆரம்பிக்கும்.
*தலைமுடி: முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்; வெள்ளை முடி தோன்றும்.